ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இந்திய மாணவர்கள் நான்கு பேர் பலியாகி உள்ளனர்.
ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ்பெர்க் அருகே உள்ள ஆற்றில் இறங்கிய நான்கு இந்திய மருத்துவ மாணவர்கள் நீரில் மூழ்கி பலியானதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதாவது, இந்தியாவை சேர்ந்த ஹர்ஷல் ஆனந்தராவ், நிஷா புபேஷ் அஷ்வக் பிஞ்ஞாரி, ஜியா, ஜீஷான், கையம்ஸ் முகம்மது யாகூப் ஆகியோர் வெளிகி நகரில் உள்ள நோகோரட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தனர். இதில் ஜியா, ஜீஷான், சகோதரர்கள் ஆவர். மாணவர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தில் நடந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் மாணவி நிஷா மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கினர். அப்போது நீரின் வேகம் அதிகரித்ததால் மாணவர்கள் அடித்து செல்லப்பட்டனர். அப்போது ஜீஷான் தனது குடும்பத்துக்கு வீடியோ அழைப்பு செய்திருந்தார். இதன் காரணமாக இந்த காட்சியை அவரது குடும்பத்தினர் நேரலையில் பார்த்துள்ளனர். மீட்பு படையினர் இருவரின் உடல்களை மீட்டுள்ளனர். மேலும் இரு மாணவர்களின் உடல்களை தேடி வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல்களை குடும்பத்தினர் இடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.