உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் உறுப்பு தானம் செய்யும் உன்னதமான செயலை மத்திய அரசு ஊழியர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் அதிகபட்சம் 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு விடுப்பு தற்போது 30 நாட்களாக உள்ளது. அரசு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியருக்கு இனி அதிகபட்சம் 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்கப்படும்.
இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம், 1994-க்கு ஏற்றவகையில் இருக்க வேண்டும். இந்த சிறப்பு விடுப்பு, இதர விடுப்புகளுடன் இணைக்கப்படாது. உறுப்பு தானத்துக்கான சிகிச்சையை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால், சம்பந்தப்பட்ட துறைதலைவரின் சான்றிதழை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.