வரும் டிசம்பர் 29ஆம் தேதி முதல், அமேசான் இந்தியா நிறுவனத்தின் உணவு விநியோக சேவை வழங்கும் அமேசான் ஃபுட் நிறுவனம், தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, ஜோமாட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு விநியோக நிறுவனங்களுக்கு போட்டியாக அமேசான் ஃபுட் தொடங்கப்பட்டது. எனினும், பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே அமேசான் ஃபுட் சேவையை வழங்கி வந்தது. இந்நிலையில், செலவுகளை குறைக்கும் விதமாக, பணி நீக்கம் செய்வது, அமேசான் அகாடமி நிறுவனத்தை மூடுவது, போன்ற செயல்களில் அமேசான் ஈடுபட்டு வருகிறது. அதன் பகுதியாக, அமேசான் ஃபுட் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஜோமாட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் உணவு விநியோகத் துறையில் முன்னணியில் உள்ளன. சர்வதேச நிறுவனமான ஊபர் ஈட்ஸ் நிறுவனம் கூட பின் தங்கையே உள்ளது குறிப்பிடத்தக்கது.