கனடாவில் நேற்று கட்டுக்கடங்காத காட்டுத்தீ பரவியது. இதனால் சுமார் 6000 பேர் அந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனடாவின் மேற்கு மாகாணம் அல்பெர்டா. இங்கு நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது. அப்போது காற்று பலமாக வீசியதால் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் வேகமாக பரவியது. இது குறித்த தகவலை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டர்கள் மூலம் விரைந்தனர். தீயை அணைக்க போராடினர்.
அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வனப் பகுதியை ஒட்டி உள்ள அபசன்ட், விரேரி கிரிக், போன்ற நகர்களில் வாழும் 6 ஆயிரம் மக்களை மீட்டு அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவத்தின் போது மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்ததால் பலர் காயமடைந்தனர். இந்த காட்டுத்தீ ஆயிரக்கணக்கான ஏக்கர்களை நாசம் செய்துள்ளது. அதோடு அப்பகுதியில் உள்ள காற்றின் தரத்தையும் குறைத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வானிலை மாற்றம் மிகவும் மோசமாக இருக்கும் என்று கனடாவின் வனத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர். பலத்த காற்று வீசுவதால் தீயை அணைப்பது மிகவும் சிரமமாக உள்ளதாக கூறியுள்ளனர்.