சீனாவை சேர்ந்த Xpeng நிறுவனம், பறக்கும் கார் ஒன்றை தயாரித்துள்ளது. இந்தக் காரில் முதன் முதலாக மனிதர்கள் பயணம் செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், இந்த காரின் முதல் பயணிகள் போக்குவரத்து சோதனை நடத்தப்பட்டது. பறக்கும் காரில் மனிதர்களின் பயணம் வெற்றி அடைந்துள்ளதால், இந்த காரை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பறக்கும் கார், ஒரு மணி நேரத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டதாகும். இந்த காரில் அதிகபட்சமாக 760 கிலோ எடை வரை ஏற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் தரை இறங்குவதற்கும், பறப்பதற்கும், ஏதுவாக, திசைக்கு இரண்டாக, 8 புரோபலர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. துபாயில் நடந்த சோதனை ஓட்டத்தில் 90 நிமிடங்களுக்கு இந்த பறக்கும் கார் இயக்கப்பட்டது. இந்த காருக்கு X2 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய Xpeng நிறுவனத்தின் பொது மேலாளர் Minguan Qiu, “சர்வதேச சந்தைப்படுத்துதலை நோக்கி நாங்கள் படிப்படியாக நகர்ந்து வருகிறோம். உலகில் உள்ள நகரங்களில் புதுமையை வரவேற்கும் நகரமாக துபாய் உள்ளது. எனவே, எங்கள் முதல் பயணத்திற்கு துபாய் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது” என்று கூறினார். X2 பறக்கும் கார், உலகின் முதல் பறக்கும் கார் இல்லை என்றாலும், முதல் முறையாக மனிதர்களை வெற்றிகரமாக சுமந்து சென்ற பறக்கும் கார் என்பது குறிப்பிடத்தக்கது.