நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி உறுப்பினரான செல்வராசு இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், பாமக தலைவர் ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த எம்பி செல்வராசு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராவார். மொத்தம் 4 முறை நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 1975 முதல் மக்கள் பணியில் ஈடுபட்ட அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்காக, மாற்று சிறுநீரகம் பொறுத்துக் கொள்ளும் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அண்மையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.