அரசு மருத்துவமனைகள் கொள்முதல் செய்யும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழை மக்களை சென்றடைவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், கோவை அரசு மருத்துவமனை மருந்துக்கடை பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி என்பவர், தனது ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று(அக்.,27) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் விநியோகிப்பது என்பது தீவிரமானது. இதில், மருந்து நிறுவனங்களுக்கும், சுகாதார துறைக்கும் தொடர்பு உள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை. ஆனால், அந்த மருந்துகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் புதிது புதிதாக நோய்கள் பரவுவதற்கான காரணங்கள், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை நவ.,4க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.