மத்திய ஆப்பிரிக்க நாடான கேபோனில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
மத்திய ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் கேபோன் நாடு உள்ளது. இதன் தலைநகரம் லிப்ரேவில். சுமார் 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட கேபோன், எண்ணெய் ஏற்றுமதியை நம்பியுள்ளது. ஒரு நாளைக்கு 2 லட்சம் பேரல் எண்ணெய் உறபத்தி செய்யும். இங்கு அதிபராக அலி போங்கோ ஒண்டிம்பா உள்ளார். இவர் 14 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் இருந்து வந்தார். இங்கு ஆகஸ்ட் 26 அன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது வன்முறை மற்றும் பொய் பிரச்சாரத்தை தடுக்க இணைய முடக்கத்துடன் கூடிய ஊரடங்கிற்கு தேர்தலுக்கு முன்பே உத்தரவிட்டது போங்கோ அரசு.
இந்த தேர்தலில் தற்போதைய அதிபரான அலி போங்கோ ஒண்டிம்பா, 3-வது முறையாக 64 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவரை எதிர்த்த ஆல்பர்ட் ஓண்டோ ஓசா 30 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஓசா, இந்த முடிவை ஏற்று கொள்ளாமல் விமர்சித்தார். இந்நிலையில், ஓசாவின் பிரச்சார மேற்பார்வையாளர் மிக் ஜாக்டேன், ஆட்சியை கொடுக்கும்படி போங்கோவிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் ஒரு புரட்சி அமைப்பை சேர்ந்த வீரர்கள் அரசாங்க தொலைக்காட்சியில் தோன்றி, நடந்து முடிந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டதாகவும், ஆட்சி கலைக்கப்பட்டதாகவும் அறிவித்தனர். இந்த வீரர்களுடன் நாட்டின் ராணுவ வீரர்களும், காவல்துறையை சேர்ந்தவர்களும் இருந்தனர். இதன்பின் தலைநகர் லிப்ரேவில்லில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இவ்வாறு கேபோனில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இது கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்படும் 10-வது ராணுவ ஆட்சி மாற்றமாகும்.