தமிழகத்தில் இன்று முதல் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் இன்று முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் பெற்று வர வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி இதற்கான இணையதளம் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதில் முதல் நாளான நேற்று 15 ஆயிரத்து 945 வாகனங்கள் வெவ்வேறு தேதிகளில் கொடைக்கானல் வருவதற்கு விண்ணப்பித்துள்ளது. அந்த வாகனங்கள் அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் கொடைக்கானலுக்கு வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் இபாஸ் பெற்று வரவேண்டும் என்று நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மேலும் வாகனங்கள் அனைத்தும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தபட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன