இந்தோனேசிய தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 15 பேர் பலியாகினர்.
இந்தோனேசியாவின் சுமத்தரா தீவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள சோலோக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட தங்கம் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு கிராம மக்கள் மழை பெய்யும் வேளையில் தங்கத் தாதுவை தோண்டிக்கொண்டு இருந்தனர். அப்போது கனமழையின் காரணமாக திடீர் நிலச்சரிவு நேரிட்டது. அருகிலுள்ள மலைகளில் இருந்து சேறு சரிந்து விழுந்ததன் மூலம், சுரங்கத்தில் உள்ளவர்கள் சேற்றில் புதைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு நேர்ந்த போது சுரங்கப்பகுதியில் 25 பேர் இருந்ததாக பேரிடர் மீட்பு படை அலுவலக தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், "15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 7 பேரின் நிலை பற்றிய தகவல் இல்லை. மீட்பு பணிகள் தொடர்கின்றன" என்றார்.