கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வாகி இருந்தால் அது குறித்து தகவல்களை தெரிவுபடுத்தலாம் என அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கியது. இதில் தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வந்தது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு செய்தி அனுப்பி வைக்கப்படும். மேலும் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் அறிய கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தை தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பம் பற்றி விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்கள் தகுதியுடையது என கருதப்படும் பட்சத்தில் இ- சேவை மையம் மூலமாக மேல்முறையீடு செய்யலாம் இதற்காக 30 நாட்களில் தீர்வுகள் காணப்படும். அதேபோல் தகுதியற்ற பயனாளிகள் தவறுதலாக தேர்வாகி இருந்தால் அது குறித்த தகவல்களையும் தெரிவிக்கலாம். இதற்கு கலெக்டர் அலுவலக மையங்களில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 6:00 மணி வரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.