அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவர் தனது பிரதமர் பதவியை திடீரென்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவருடைய இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக தான் பதவி விலகப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது நான் பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இந்த பதவிக்கு என்னை விட தகுதியான ஒருவர் நியமிக்கப்படுவார். என்னுடைய இந்த முடிவுக்கு தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்கள் உள்ளன. அதிலும் அரசியல் காரணங்களே அதிகம். நான் இந்த பிரதமர் பதவியில் பல ஆண்டுகளாக இருந்து விட்டேன். இதற்கு மேலும் இந்த பதவிக்கு பொருத்தமான நபராக என்னை நான் நினைக்கவில்லை. எனக்கு நெருங்கியவர்கள் உள்ளூர் மற்றும் ஐரோப்பிய தேர்தல்களில் போட்டியிட உள்ளனர். அவர்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்கவே நான் பதவி விலகுகிறேன். அயர்லாந்தின் பிரதமராக இருந்தது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியான அனுபவம் தந்தது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் பதவியை விட்டுக் கொடுத்து விலக வேண்டும். தற்போதைக்கு என்னுடைய எதிர்காலம் குறித்து நான் எந்த திட்டமும் வகுக்கவில்லை. இதை குறித்து இனிதான் சிந்திக்க வேண்டும் என்றார். இவருடைய தந்தை மும்பையை சேர்ந்தவர். தாய் அயர்லாந்தை சேர்ந்தவர். இவரது தலைமையிலான பைன் கேயல் கட்சி அயர்லாந்தில் கடந்த 2017 முதல் ஆட்சியில் இருக்கிறது.
அயர்லாந்து அரசியல் சாசனத்தில் குடும்பம் என்ற வார்த்தையை திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுக்கு விரிவுபடுத்துவது மற்றும் பெண்களின் கடமைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண் ஆதிக்க அம்சங்களை நீக்குவது போன்ற விவகாரங்களில் பொதுமக்களின் அனுமதியை கேட்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசியல் சாசனத்தில் சீர்திருத்தம் செய்வதற்கு இந்த இரு வாக்கெடுப்புகளிலும் பொதுமக்கள் மறுத்துவிட்டனர். இந்நிலையில் இவர் தனது ராஜினாமா முடிவை திடீரென்று அறிவித்துள்ளார். இதன் மூலம் அந்நாட்டு அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.