இஸ்ரேல் ராணுவம் ரபா நகரில் சரமாரி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
காசா போர் ஏழு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இந்த போரை நிறுத்த ஐநா உட்பட உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன. வெளிநாடுகளில் இஸ்ரேலுக்கு மக்கள் எதிராக கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் பலியாகினர். இதை அடுத்து இஸ்ரேல் ரபா நகருக்குள் ராணுவத்தை அனுப்பி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதையொட்டி அங்குள்ள பொதுமக்கள் வெளியேறுமாறு ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது இஸ்ரேல் ராணுவம் ரபா நகரில் சரமாரி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த நகர் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. அங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளனர். மக்கள் அனைவரும் ஐநா முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரபாவின் புறநகர் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் பெரிய அளவில் படைகளை குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா தீவிர எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்பகுதியில் பதுங்கி இருந்த ஹமாஸ் குழுவினர் தற்போது இஸ்ரேல் படை மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.