மகாராஷ்டிராவில் கியான் பரே சிண்ட்ரோம் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சோலாபூரில் ஒருவர் இதனால் உயிரிழந்திருக்கலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது. 16 பேர் வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நோய் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படலாம் என்பதால், குடிநீர் மற்றும் உணவு சுகாதாரத்தை பேணுவதன் மூலம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த அரிய நோய் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் நரம்பு மண்டலத்தை தாக்குவதால் ஏற்படுகிறது. இது தசை பலவீனம், நடக்கும் போது சிரமம், மரத்துபோவது போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுமானால், நோயாளிகள் முழுமையாக குணமடையலாம். மகாராஷ்டிராவில் நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உயர்நிலைக் குழுவை அனுப்பியுள்ளது.