பூமியின் வளிமண்டல மேலடுக்கில் அயனோஸ்பியர் எனப்படும் அயனி மண்டலம் காணப்படுகிறது. இந்த மண்டலம் தொலைத்தொடர்பு சேவைகளை ஏற்படுத்துவதற்கு மிகவும் துணை புரிவதாக உள்ளது. இந்த நிலையில், அயனி மண்டலத்தில் எதிர்பாராத நேரத்தில் ஆங்கில எழுத்துக்களான எக்ஸ் மற்றும் சி ஆகிய வடிவங்களில் புதிய அமைப்புகள் தெரிவதாக நாசா தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நாசாவின் குளோபல் ஸ்கேல் அப்சர்வேஷன் ஆஃப் தி லிம்ப் அண்ட் டிஸ்க் - GOLD என்ற செயற்கைக்கோள், அயனி மண்டலத்தில் புது புது வடிவத்தில் அமைப்புகள் காணப்படுவதை கண்டறிந்துள்ளது. பொதுவாக, சூரிய காந்த புயல், எரிமலை வெடிப்பு போன்ற அசாதாரண வானிலை சூழல்கள் நிலவும் போது இத்தகைய அமைப்புகள் ஏற்படும். ஆனால், எந்த விதமான அசாதாரண சூழல்களும் நிலவாத சமயத்தில் இத்தகைய அமைப்புகள் ஏற்பட்டுள்ளது, செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இத்தகைய வடிவங்கள் ஏற்படுவதற்கு அயனி மண்டலத்தில் வேறு காரணங்கள் உள்ளன என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பற்றி தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.