கடந்த ஏப்ரல் 23, 2024 அன்று, மேம்பட்ட கூட்டு சூரியப் பாய்மர அமைப்பு எனப்படும் ஒரு சூரியப் பாய்மர முன்மாதிரியை நாசா விண்ணில் செலுத்தியது. கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி, இந்த சூரியப் பாய்மரம் வெற்றிகரமாக விரிந்தது என்பதை நாசா உறுதி செய்தது. மேலும், செப்டம்பர் 5ஆம் தேதி, இந்த சூரியப் பாய்மரத்தின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது. இந்தப் புகைப்படத்தில், சூரிய ஒளியை பிரதிபலிக்கும் பாய்மரம் தெளிவாக காணப்படுகிறது.
இந்த சூரிய பாய்மரம், சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் சக்தியைப் பயன்படுத்தி விண்கலத்தை முன்னோக்கித் தள்ளுகிறது. இதன் மூலம், விண்கலம் எரிபொருள் இல்லாமல் நீண்ட தூரம் பயணிக்க முடியும். இது விண்வெளிப் பயணத்திற்கு ஒரு புதிய வழியை திறந்துள்ளது. இதன் மூலம் விண்வெளிப் பயணத்தின் செலவை குறைக்க முடியும். தற்போது இந்த விண்கலம் நிலையாக இல்லாமல் சுற்றுகிறது. விரைவில் இதை நிலைப்படுத்தும் பணியில் நாசா ஈடுபட உள்ளது. பின்னர், இந்த விண்கலத்தை சுற்றுப்பாதையில் இயக்கி பல்வேறு சோதனைகள் செய்ய திட்டமிட்டுள்ளது.