அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று அதிகாலை மோதல் ஏற்பட்டது.
அமெரிக்கா முழுவதும் கல்லூரி வளாகங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று அதிகாலை மோதல் ஏற்பட்டது. இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர்.
முன்னதாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் முகாமிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேல் ஆதரவாளர்கள் பல்கலைக்கழகத்தில் புகுந்து பாலஸ்தீன ஆதரவாளர்களின் முகாம்களை அகற்றினர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்தது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் வளாகமே கலவர இடமாக மாறியது. உடனே இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தகவலை பல்கலைக்கழக துணைவேந்தர் மேரி வஸாகோ கூறினார்.