பொதுவாக, சூரிய புயல்கள் பூமியின் துருவப் பகுதிகளையே தாக்கும். அதிலும் குறிப்பாக, வடக்கு ஐரோப்பா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஆர்டிக் பகுதிகளையே பெரும்பாலும் தாக்கும். ஆனால், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஏற்பட்ட சூரிய புயல், கடந்த 6 வருடத்தில் பூமியை தாக்கிய மிக மோசமான சூரிய புயலாக பதிவு செய்யப்பட்டது. இந்த சூரிய புயலின் தாக்கத்தை இந்தியாவிலும் உணர முடிந்தது. சூரிய புயலின் தாக்கம் இந்தியா வரை நீள்வது அரிதினும் அரிதான நிகழ்வாக சொல்லப்பட்டுள்ளது. இந்த சூரிய புயல் காரணமாக, லடாக் பகுதியில் ஆரோராக்கள் தென்பட்டுள்ளன.
இந்தியாவின் வான் இயற்பியல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், லடாக் பகுதியில் தென்பட்ட ஆரோராக்கள் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இரவு நேர வானில், லடாக் அப்பகுதியில் ஆரோராக்கள் என்ற ‘துருவ ஒளிகள்’ காணப்படும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் 23 ம் தேதிக்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டு இது போன்ற நிகழ்வு ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.