ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் கடந்த 2 ஆண்டுகளில் அரிசியின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
அண்மையில் அரிசிக்கு வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கிலோவிற்கு ரூ.3 முதல் ரூ.6 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் தேவை அதிகரித்துள்ளதால் இந்தியாவில் இருந்து அனைத்து வகையான அரிசிகளும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அரிசியின் விலை படிப்படியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பாசுமதி அரிசி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.600 விற்பனையான 25 கிலோ அடங்கிய ஒரு மூட்டை அரிசி தற்போது ரூ.900 விற்பனையாகிறது.
இது தொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், அத்தியாவசியமான உணவு பொருள் அரிசிக்கு ஒன்றிய அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு போதுமான அரிசியை கையில் வைத்து கொண்டு ஏற்றுமதியை செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழகத்தில் விலைவாசி உயர்வு ஏற்படும் என்று கூறினார்.