அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் ஹவுஸ்டனில், அண்டை வீட்டார் மீது ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 8 வயது சிறுவனும் அடக்கம். இந்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சிஸ்கோ ஒரோபெசா என்பவர், தனது ஹவுஸ்டன் வீட்டில் அருகில் உள்ள தோட்டத்தில், நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தார். இது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தொந்தரவாக இருந்ததால், துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறு அவரது அண்டை வீட்டுக்காரர் வலியுறுத்தியுள்ளார். இதில் கோபமடைந்த ஒரோபெசா, அவரது வீட்டுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்தவர்கள் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியுள்ளார். இதில் 8 வயது சிறுவன் உட்பட 5 பேர் பலியான நிலையில், 3 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தை தொடர்ந்து, ஒரோபெசா தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரிடம் துப்பாக்கி இருக்கலாம் என்பதால், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை, அமெரிக்காவில் 18 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.