கடந்த ஜனவரி மாதத்தில், அதானி குழுமம் மீது, ஹிண்டன்பர்க் அறிக்கை நிதி மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது. அதை தொடர்ந்து, அதானி குழும பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. இந்த நிலையில், அதானி குழும சரிவின் போது, ஷார்ட் செல்லிங் வாயிலாக கிட்டத்தட்ட 12 நிறுவனங்கள் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு நிறுவனத்தின் பங்கு விலை மீது பந்தயம் கட்டி லாபம் பெறுவது ஷார்ட் செல்லிங் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதை ஒட்டியும், அதற்கு இரு தினங்கள் முன்பாகவும், அதானி நிறுவனம் மீது ஷார்ட் செல்லிங் நடைபெற்று உள்ளது. இதன் மூலம், கிட்டத்தட்ட 12 நிறுவனங்கள் அதிகப்படியான லாபத்தை ஈட்டியுள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவை இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த பட்டியலில், 3 நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்தவை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை செபியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.