டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2 நிறுவனங்களாக பிரிய உள்ளது. சரக்கு வாகனங்கள் தனி நிறுவனமாகவும், பயணிகள் வாகனங்கள் தனி நிறுவனமாகவும் பிரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்புதலை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக்குழு வழங்கி உள்ளது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக இன்றைய பங்குச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.
டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக வாகனங்கள் தனி நிறுவனமாகவும், பயணிகள் வாகனங்கள் தனி நிறுவனமாகவும் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் அதே அளவு பங்குகளை பங்குதாரர்களுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தை இரண்டாகப் பிரிக்கும் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் அடுத்த 12 முதல் 15 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நிறுவனத்தின் செயல்பாடுகளை கையாள்வதில் எளிமை ஏற்படும் எனவும், நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகிறது.