ஹமாஸ் படையினர் மீது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தாக்குதல் இலக்குகளை தீர்மானித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 6 மாத காலமாக இஸ்ரேல் பாலஸ்தீன போர் நடந்து வருகிறது. இந்த போரில் இதுவரை 33000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், ‘லாவண்டர்’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவர் பயங்கரவாதியா இல்லையா என்பதை இஸ்ரேல் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. மெஷின் லேர்னிங் முறையில் செயல்படும் இந்த தொழில்நுட்பம், பயங்கரவாதிகளின் குணாதிசயங்களை அடிப்படையாகக் கொண்டு, மனிதர்களுக்கு 1 முதல் 100 வரை மதிப்பெண்களை வழங்குகிறது. பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்பவர்கள் போன்ற பல்வேறு அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 37000 க்கும் அதிகமானோர் பயங்கரவாதிகளாக இருப்பதற்கு சாத்தியம் உள்ளவர்களாக இஸ்ரேல் வகைப்படுத்தி உள்ளது. மேலும், போர் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இந்த லாவண்டர் அடையாளம் காட்டிய நபர்கள் மீது எந்தவித மறு ஆய்வும் செய்யப்படாமல் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதன்படி, பயங்கரவாதி என கருதப்படும் நபரை கொல்வதற்கு பொதுமக்கள் உயிர்களும் பலியாகி உள்ளன. இளம் பயங்கரவாதிக்கு 15 முதல் 20 பொதுமக்கள், மூத்த பயங்கரவாதிக்கு 100 பொதுமக்கள் என பாதிப்பு நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.