ஈராக்கின் மீது துருக்கி தாக்குதல் நடத்தியதில் இருவர் பலியாகினர்.
ஈராக்கில் துருக்கி படைகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் இருவர் பலியாகி உள்ளனர். மேலும் ஒருவர் காயம் அடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. துருக்கி விமானம் டுஹோக் பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இது நேற்று அதிகாலை நடைபெற்றது. அப்போது மூலிகை பறிக்க சென்ற இருவர் இந்த தாக்குதலில் பலியாகினர். அவ்வப்போது வடக்கு ஈராக்கில் எல்லை தாண்டி துருக்கி படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. குர்தீஸ் தொழிலாளர் கட்சியின் கிளர்ச்சி படைக்கு எதிராக அவர்களை குறி வைத்து இந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்படுகிறது. துருக்கி அரசுக்கு எதிராக இந்த அமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.