பாலஸ்தீனத்தை ஐநா பொது சபையில் முழு உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக வரைவு தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது.
காசா போரை நிறுத்த கோரி ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது. இந்நிலையில், ஐநா பொது சபையில் பாலஸ்தீனத்தை முழுநேர உறுப்பினராக்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதை அடுத்து பொது சபையின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் பாலஸ்தீனத்தை ஐநா பொது சபையில் முழு உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக வரைவு தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தனர். அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்தனர். சுமார் 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்த தீர்மானத்திற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நாவுக்கான இஸ்ரேல் தூதர் கிளாட் எர்டன் பேசும்போது, இந்த தீர்மானம் ஐநா சாசனத்தை மீறுவதாகும். மேலும் அவர் காகிதங்களை கிழிக்கும் கருவியில் தீர்மான நகலை போட்டார். தற்போது ஐநா பொதுச் சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக்க ஆதரவு கிடைத்துள்ளதால் மேற்கொண்டு பாதுகாப்பு கவுன்சில் முடிவெடுக்க உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளராக மட்டுமே இருந்தது.