பெல்ட் மற்றும் ரோடு திட்டத்தின் ஒரு பகுதியாக அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களை மேம்படுத்த சீனாவுடன் இணைந்து பணியாற்ற போவதாக இலங்கை கூறியுள்ளது.
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே ஆறு நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். அவர் கடந்த 25ஆம் தேதி சீனா சென்றார். இந்த பயணம் நேற்றுடன் முடிவடைந்தது. அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு, கடன் மறுசீரமைப்பு போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் ஆலோசித்தார்.
இந்நிலையில் பெல்ட் மற்றும் ரோடு திட்டத்தின் ஒரு பகுதியாக அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களை மேம்படுத்த சீனாவுடன் இணைந்து பணியாற்ற போவதாக இலங்கை கூறியுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது, இலங்கைக்கு நிதி நிவாரணம் அளித்து உதவவும், அதன் நிதி நிறுவனங்களுக்கு ஆதரவளித்து சர்வதேச நாணய நிதியத்தில் சாதகமான பங்கை வகிக்க சீனா தயாராக இருக்கிறது. கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களை மேம்படுத்தும் திட்டத்தை மேற்கொள்ளவும், பெல்ட் மற்றும் ரோடு கட்டுமானத்தின் முதன்மை திட்டங்களாக மாற்றுவதற்கும் சீனாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் இலங்கையின் கடன் மறு சீரமைப்பு ஒப்பந்தத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்று சீனா கூறியுள்ளது.